12.400 பொய்யடிமை யில்லாத புலவர் ( ) |
Back to Top
சேக்கிழார் பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
12.400  
பொய்யடிமை யில்லாத புலவர்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
செய்யுள்நிகழ் சொல்தெளிவும் செவ்வியநூல் பலநோக்கும் மெய்யுணர்வின் பயனிதுவே எனத்துணிந்து விளங்கியொளிர் மையணியுங் கண்டத்தார் மலரடிக்கே ஆளானார் பொய்யடிமை யில்லாத புலவர்எனப் புகழ்மிக்கார்.
| [1] |
பொற்பமைந்த அரவாரும் புரிசடையார் தமையல்லால் சொற்பதங்கள் வாய்திறவாத் தொண்டுநெறி தலைநின்ற பெற்றியினில் மெய்யடிமை யுடையாராம் பெரும்புலவர்
| [2] |
ஆங்கவர்தம் அடியிணைகள் தலைமேற்கொண் டவனியெலாம் தாங்கியவெண் குடைவளவர் குலஞ்செய்த தவம்அனையார் ஓங்கிவளர் திருத்தொண்டின் உண்மையுணர் செயல்புரிந்த பூங்கழலார் புகழ்ச்சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம்.
| [3] |
Back to Top
சேக்கிழார் பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
12.410  
புகழ்ச் சோழ நாயனார்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
குலகிரியின் கொடுமுடிமேல் கொடிவேங்கைக் குறியெழுதி நிலவுதரு மதிக்குடைக்கீழ் நெடுநிலங்காத் தினிதளிக்கும் மலர்புகழ்வண் தமிழ்ச்சோழர் வளநாட்டு மாமூதூர் உலகில்வளர் அணிக்கெல்லாம் உள்ளுறையூ ராம்உறையூர்.
| [1] |
அளவில்பெரும் புகழ்நகரம் அதனில்அணி மணிவிளக்கும் இளவெயிலின் சுடர்ப்படலை இரவொழிய எறிப்பனவாய்க் கிளரொளிசேர் நெடுவானப் பேர்யாற்றுக் கொடிகெழுவும் வளரொளிமா ளிகைநிரைகள் மருங்குடைய மறுகெல்லாம்.
| [2] |
நாகதலத் தும்பிலத்தும் நானிலத்தும் நலஞ்சிறந்த போகமனைத் தினுக்குறுப்பாம் பொருவிறந்த வளத்தினவாய் மாகம்நிறைந் திடமலிந்த வரம்பில்பல பொருள்பிறங்கும் ஆகரமொத் துளஅளவில் ஆவணவீ திகளெல்லாம்.
| [3] |
பார்நனைய மதம்பொழிந்து பனிவிசும்பு கொளமுழங்கும் போர்முகவெங் கறையடியும் புடையினம்என் றடையவரும் சோர்மழையின் விடுமதத்துச் சுடரும்நெடு மின்னோடைக் கார்முகிலும் பலதெரியா களிற்றுநிரைக் களமெல்லாம்.
| [4] |
படுமணியும் பரிச்செருக்கும் ஒலிகிளரப் பயில்புரவி நெடுநிரைமுன் புல்லுண்வாய் நீர்த்தரங்க நுரைநிவப்ப விடுசுடர்மெய் யுறையடுக்கல் முகில்படிய விளங்குதலால் தொடுகடல்கள் அனையபல துரங்கசா லைகளெல்லாம்.
| [5] |
துளைக்கைஅயிரா வதக்களிறும் துரங்கஅர சுந்திருவும் விளைத்தஅமு துந்தருவும் விழுமணியுங் கொடுபோத உளைத்தகடல் இவற்றொன்று பெறவேண்டி உம்பரூர் வளைத்ததுபோன் றுஉளதங்கண் மதில்சூழ்ந்த மலர்க்கிடங்கு.
| [6] |
காரேறுங் கோபுரங்கள் கதிரேறும் மலர்ச்சோலை தேரேறும் மணிவீதி திசையேறும் வசையிலணி வாரேறு முலைமடவார் மருங்கேறு மலர்க்கணைஒண் பாரேறும் புகழ்உறந்தைப் பதியின்வளம் பகர்வரிதால்.
| [7] |
அந்நகரில் பாரளிக்கும் அடலரச ராகின்றார் மன்னுதிருத் தில்லைநகர் மணிவீதி யணிவிளக்கும் சென்னிநீ டநபாயன் திருக்குலத்து வழிமுதலோர் பொன்னிநதிப் புரவலனார் புகழ்ச்சோழர் எனப்பொலிவார்.
| [8] |
ஒருகுடைக்கீழ் மண்மகளை உரிமையினில் மணம்புணர்ந்து பருவரைத்தோள் வென்றியினால் பார்மன்னர் பணிகேட்ப திருமலர்த்தும் பேருலகும்
| [9] |
பிறைவளரும் செஞ்சடையார் பேணுசிவா லயமெல்லாம் நிறைபெரும்பூ சனைவிளங்க நீடுதிருத் தொண்டர்தமைக் குறையிரந்து வேண்டுவன குறிப்பின்வழி கொடுத்தருளி முறைபுரிந்து திருநீற்று முதல்நெறியே பாலிப்பார்.
| [10] |
அங்கண்இனி துறையுநாள் அரசிறைஞ்ச வீற்றிருந்து கொங்கரொடு குடபுலத்துக் கோமன்னர் திறைகொணரத் தங்கள் குல மரபின்முதல் தனிநகராங் கருவூரின் மங்கலநா ளரசுரிமைச் சுற்றமுடன் வந்தணைந்தார்.
| [11] |
வந்துமணி மதிற்கருவூர் மருங்கணைவார் வானவர்சூழ் இந்திரன்வந் தமரர்புரி எய்துவான் எனஎய்திச் சிந்தைகளி கூர்ந்தரனார் மகிழ்திருவா னிலைக்கோயில் முந்துறவந் தணைந்திறைஞ்சி மொய்யொளிமா ளிகைபுகுந்தார்.
| [12] |
மாளிகைமுன் அத்தாணி மண்டபத்தில் மணிபுனைபொன் கோளரிஆ சனத்திருந்து குடபுலமன் னவர்கொணர்ந்த ஓளிநெடுங் களிற்றின்அணி உலப்பில்பரி துலைக்கனகம் நீளிடைவில் விலகுமணி முதனிறையுந் திறைகண்டார்.
| [13] |
திறைகொணர்ந்த அரசர்க்குச் செயலுரிமைத் தொழிலருளி முறைபுரியுந் தனித்திகிரி முறைநில்லா முரண்அரசர் உறையரணம் உளவாகில் தெரிந்துரைப்பீர் எனவுணர்வு நிறைமதிநீ டமைச்சர்க்கு மொழிந்தயுளி நிகழுநாள்.
| [14] |
சென்றுசிவ காமியார் கொணர்திருப்பள் ளித்தாமம் அன்றுசித றுங்களிற்றை அறஎறித்து பாகரையுங் கொன்றஎறி பத்தர்எதிர் என்னையுங்கொன் றருளுமென வென்றிவடி வாள்கொடுத்துத் திருத்தொண்டில் மிகச்சிறந்தார்.
| [15] |
விளங்குதிரு மதிக்குடைக்கீழ் வீற்றிருந்து பாரளிக்கும் துளங்கொளிநீண் முடியார்க்குத் தொன்முறைமை நெறியமைச்சர் அளந்ததிறை முறைகொணரா அரசனுளன் ஒருவனென உளங்கொள்ளும் வகையுரைப்ப வுறுவியப்பால் முறுவலிப்பார்.
| [16] |
ஆங்கவன்யார் என்றருள அதிகன்அவன் அணித்தாக ஓங்கெயில்சூழ் மலையரணத் துள்ளுறைவான் எனவுரைப்ப ஈங்குநுமக் கெதிர்நிற்கும் அரணுளதோ படையெழுந்தப் பாங்கரணந் துகளாகப் பற்றறுப்பீர் எனப்பகர்ந்தார்
| [17] |
அடல்வளவர்ஆணையினால் அமைச்சர்களும் புறம்போந்து கடலனைய நெடும்படையைக் கைவகுத்து மேற்செல்வார் படர்வனமும் நெடுங்கிரியும் பயிலரணும் பொடியாக மிடலுடைநாற் கருவியுற வெஞ்சமரம் மிகவிளைத்தார்.
| [18] |
வளவனார் பெருஞ்சேனை வஞ்சிமலர் மிலைந்தேற்ப அளவில்அர ணக்குறும்பில் அதிகர்கோன் அடற்படையும் உளநிறைவெஞ் சினந்திருகி யுயர்காஞ்சி மலைந்தேற்ப கிளர்கடல்கள் இரண்டென்ன இருபடையுங் கிடைத்தனவால்.
| [19] |
கயமொடு கயம்எதிர் குத்தின அயமுடன் அயமுனை முட்டின வயவரும் வயவரும் உற்றனர் வியனமர் வியலிட மிக்கதே.
| [20] |
மலையொடு மலைகள் மலைந்தென அலைமத அருவி கொழிப்பொடு சிலையினர் விசையின் மிசைத்தெறு கொலைமத கரிகொலை யுற்றவே.
| [21] |
சூறை மாருதம் ஒத்தெதிர் ஏறு பாய்பரி வித்தகர் வேறு வேறு தலைப்பெய்து சீறி யாவி செகுத்தனர்.
| [22] |
மண்டு போரின் மலைப்பவர் துண்ட மாயிட வுற்றுஎதிர் கண்ட ராவி கழித்தனர் உண்ட சோறு கழிக்கவே.
| [23] |
வீடி னாருட லிற்பொழி நீடு வார்குரு திப்புனல் ஓடும் யாறென வொத்தது கோடு போல்வ பிணக்குவை.
| [24] |
வானி லாவு கருங்கொடி மேனி லாவு பருந்தினம் ஏனை நீள்கழு கின்குலம் ஆன வூணொ டெழுந்தவே.
| [25] |
வரிவிற் கதைசக் கரமுற் கரம்வாள் சுரிகைப் படைசத் திகழுக் கடைவேல் எரிமுத் தலைகப் பணம்எல் பயில்கோல் முரிவுற் றனதுற் றனமொய்க் களமே.
| [26] |
வடிவேல் அதிகன் படைமா ளவரைக் கடிசூ ழரணக் கணவாய் நிரவிக் கொடிமா மரில்நீ டுகுறும் பொறையூர் முடிநே ரியனார் படைமுற் றியதே.
| [27] |
முற்றும் பொருசே னைமுனைத் தலையில் கல்திண் புரிசைப் பதிகட் டழியப் பற்றுந் துறைநொச் சிபரிந் துடையச் சுற்றும் படைவீ ரர்துணித் தனரே.
| [28] |
மாறுற் றவிறற் படைவாள் அதிகன் ஊறுற் றபெரும் படைநூ ழில்படப் பாறுற் றஎயிற் பதிபற் றறவிட்டு ஏறுற் றனன்ஓ டியிருஞ் சுரமே.
| [29] |
அதிகன் படைபோர் பொருதற் றதலைப் பொதியின் குவையெண் ணிலபோ யினபின் நிதியின் குவைமங் கையர்நீள் பரிமா எதிருங் கரிபற் றினர்எண் ணிலரே.
| [30] |
அரண்முற் றியெறிந் தஅமைச் சர்கள் தாம் இரணத் தொழில்விட் டெயில்சூழ் கருவூர் முரணுற் றசிறப் பொடுமுன் னினர்நீள் தரணித் தலைவன் கழல்சார் வுறவே.
| [31] |
மன்னுங் கருவூர் நகர்வா யிலின்வாய் முன்வந் தகருந் தலைமொய்க் குவைதான் மின்னுஞ் சுடர்மா முடிவேல் வளவன் தன்முன் புகொணர்ந் தனர்தா னையுளோர்.
| [32] |
மண்ணுக் குயிராம் எனுமன் னவனார் எண்ணிற் பெருகுந் தலையா வையினும் நண்ணிக் கொணருந் தலையொன் றில்நடுக் கண்ணுற் றதொர்புன் சடைகண் டனரே.
| [33] |
. கண்டபொழு தேநடுங்கி மனங்கலங்கிக் கைதொழுது கொண்டபெரும் பயத்துடன் குறித்தெதிர்சென் றதுகொணர்ந்த திண்டிறலோன் கைத்தலையிற் சடைதெரியப் பார்த்தருளிப் புண்டரிகத் திருக்கண்ணீர் பொழிந்திழியப் புரவலனார்.
| [34] |
முரசுடைத்திண் படைகொடுபோய் முதலமைச்சர் முனைமுருக்கி உரைசிறக்கும் புகழ்வென்றி ஒன்றொழிய வொன்றாமல் திரைசரித்த கடலுலகில் திருநீற்றி நெறிபுரந்தியான் அரசளித்த படிசால அழகிதென அழிந்தயர்வார்.
| [35] |
தார்தாங்கிக் கடன்முடித்த சடைதாங்குந் திருமுடியார் நீர்தாங்குஞ் சடைப்பெருமான் நெறிதாங்கண் டவரானார் சீர்தாங்கும் இவர்வேணிச் சிரந்தாங்கி வரக்கண்டும் பார் தாங்க இருந்தேனோ பழிதாங்கு வேன்என்றார்.
| [36] |
என்றருளிச் செய்தருளி இதற்கிசையும் படிதுணிவார் நின்றநெறி யமைச்சர்க்கு நீள்நிலங்காத் தரசளித்து மன்றில்நடம் புரிவார்தம் வழித்தொண்டின் வழிநிற்ப வென்றிமுடி என்குமரன் தனைப்புனைவீர் எனவிதித்தார்.
| [37] |
அம்மாற்றங் கேட்டழியும் அமைச்சரையும் இடரகற்றிக் கைம்மாற்றுஞ் செயல்தாமே கடனாற்றுங் கருத்துடையார் செம்மார்க்கந் தலைநின்று செந்தீமுன் வளர்ப்பித்துப் பொய்ம்மாற்றுந் திருநீற்றுப் புனைகோலத் தினிற்பொலிந்தார்.
| [38] |
கண்டசடைச் சிரத்தினையோர் கனகமணிக் கலத்தேந்திக் கொண்டுதிரு முடிதாங்கிக் குலவும்எரி வலங்கொள்வார் அண்டர்பிரான் திருநாமத் தஞ்செழுத்து மெடுத்தோதி மண்டுதழற் பிழம்பினிடை மகிழ்ந்தருளி யுள்புக்கார்.
| [39] |
புக்கபொழு தலர்மாரி புவிநிறையப் பொழிந்திழிய மிக்கபெரு மங்கலதூ ரியம்விசும்பில் முழக்கெடுப்பச் செக்கர்நெடுஞ் சடைமுடியார் சிலம்பலம்பு சேவடியின் அக்கருணைத் திருநிழற்கீழ் ஆராமை யமர்ந்திருந்தார்.
| [40] |
முரசங்கொள் கடற்றானை மூவேந்தர் தங்களின்முன் பிரசங்கொள் நறுந்தொடையல் புகழ்ச்சோழர் பெருமையினைப் பரசுங்குற் றேவலினால் அவர்பாதம் பணிந்தேத்தி நரசிங்க முனையர்திறம் நாமறிந்த படியுரைப்பாம்.
| [41] |
Back to Top
சேக்கிழார் பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
12.420  
நரசிங்க முனையரைய நாயனார்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கோடாத நெறிவிளங்கும் குடிமரபின் அரசளித்து மாடாக மணிகண்டர் திருநீறே மனங்கொள்வார் தேடாத பெருவளத்தில் சிறந்ததிரு முனைப்பாடி நாடாளும் காவலனார் நரசிங்க முனையரையர்.
| [1] |
இம்முனையர் பெருந்தகையார் இருந்தரசு புரந்துபோய்த் தெம்முனைகள் பலகடந்து தீங்குநெறிப் பாங்ககல மும்முனைநீள் இலைச்சூல முதற்படையார் தொண்டுபுரி அம்முனைவர் அடியடைவே அரும்பெரும்பேறு எனஅடைவார்.
| [2] |
சினவிடையார் கோயில்தொறும் திருச்செல்வம் பெருக்குநெறி அனவிடையார் உயிர்துறக்க வருமெனினும் அவைகாத்து மனவிடையா மைத்தொடையல் அணிமார்பர் வழித்தொண்டு கனவிடையா கிலும்வழுவாக் கடனாற்றிச் செல்கின்றார்.
| [3] |
ஆறணிந்த சடைமுடியார்க் காதிரைநாள் தொறும்என்றும் வேறுநிறை வழிபாடு விளங்கியபூ சனைமேவி நீறணியும் தொண்டர்அணைந் தார்க்கெல்லாம் நிகழ்பசும்பொன் நூறுகுறை யாமல்அளித் தின்னமுதும் நுகர்விப்பார்.
| [4] |
ஆனசெயல் முறைபுரிவார் ஒருதிருவா திரைநாளில் மேன்மைநெறித் தொண்டர்க்கு விளங்கியபொன் னிடும்பொழுதில் மானநிலை யழிதன்மை வருங்காமக் குறிமலர்ந்த ஊனநிகழ் மேனியராய் ஒருவர்நீ றணிந்தணைந்தார்.
| [5] |
மற்றவர்தம் வடிவிருந்த படிகண்டு மருங்குள்ளார் உற்றகஇழ்ச் சியராகி ஒதுங்குவார் தமைக்கண்டு கொற்றவனார் எதிர்சென்று கைகுவித்துக் கொடுபோந்தப் பெற்றியினார் தமைமிகவுங் கொண்டாடிப் பேணுவார்.
| [6] |
சீலமில ரேயெனினும் திருநீறு சேர்ந்தாரை ஞாலம்இகழ்ந் தருநரகம் நண்ணாமல் எண்ணுவார் பாலணைந்தார் தமக்களித்த படியிரட்டிப் பொன்கொடுத்து மேலவரைத் தொழுதினிய மொழிவிளம்பி விடைகொடுத்தார்.
| [7] |
இவ்வகையே திருத்தொண்டின் அருமைநெறி எந்நாளும் செவ்வியஅன் பினல்ஆற்றித் திருந்தியசிந் தையராகிப் பைவளர்வாள் அரவணிந்தார் பாதமலர் நிழல்சேர்ந்து மெய்வகைய வழியன்பின் மீளாத நிலைபெற்றார்.
| [8] |
விடநாகம் அணிந்தபிரான் மெய்த்தொண்டு விளைந்தநிலை உடனாகும் நரசிங்க முனையர்பிரான் கழலேத்தித் தடநாக மதஞ்சொரியத் தனஞ்சொரியுங் கலஞ்சேரும் கடல்நாகை அதிபத்தர் கடல்நாகைக் கவினுரைப்பாம்.
| [9] |
Back to Top
சேக்கிழார் பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
12.430  
அதிபத்த நாயனார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
மன்னி நீடிய செங்கதி ரவன்வழி மரபில் தொன்மை யாம்முதற் சோழர்தந் திருக்குலத் துரிமைப் பொன்னி நாடெனுங் கற்பகப் பூங்கொடி மலர்போல் நன்மை சான்றது நாகைப்பட் டினத்திரு நகரம்.
| [1] |
தாம நித்திலக் கோவைகள் சரிந்திடச் சரிந்த தேம லர்க்குழல் மாதர்பந் தாடுதெற் றிகள்சூழ் காமர் பொற்சுடர் மாளிகைக் கருங்கடல் முகந்த மாமு கிற்குலம் மலையென ஏறுவ மருங்கு.
| [2] |
பெருமை யில்செறி பேரொலி பிறங்கலின் நிறைந்து திரும கட்குவாழ் சேர்விட மாதலின் யாவும் தருத லில்கடல் தன்னினும் பெரிதெனத் திரைபோல் கரிப ரித்தொகை மணிதுகில் சொரிவதாங் கலத்தால்.
| [3] |
நீடு தொல்புகழ் நிலம்பதி னெட்டினும் நிறைந்த பீடு தங்கிய பலபொருள் மாந்தர்கள் பெருகிக் கோடி நீள்தனக் குடியுடன் குவலயங் காணும் ஆடி மண்டலம் போல்வதவ் வணிகிளர் மூதூர்.
| [4] |
அந்நெ டுந்திரு நகர்மருங் கலைகடல் விளிம்பில் பன்னெ டுந்திரை நுரைதவழ் பாங்கரின் ஞாங்கர் மன்னு தொன்மையின் வலைவளத் துணவினில் மலிந்த தன்மை வாழ்குடி மிடைந்தது தடநுளைப் பாடி.
| [5] |
புயல ளப்பில வெனவலை புறம்பணை குரம்பை அயல ளப்பன மீன்விலைப் பசும்பொனி னடுக்கல் வியல ளக்கரில் விடுந்திமில் வாழ்நர்கள் கொணர்ந்த கயல ளப்பன பரத்தியர் கருநெடுங் கண்கள்.
| [6] |
உணங்கல் மீன்கவர் வுறுநசைக் குருகுடன் அணைந்த கணங்கொள் ஓதிமங் கருஞ்சினைப் புன்னையங் கானல் அணங்கு நுண்ணிடை நுளைச்சியர் அணிநடைக் கழிந்து மணங்கொள் கொம்பரின் மருங்குநின்று இழியல மருளும்.
| [7] |
வலைநெ டுந்தொடர் வடம்புடை வலிப்பவர் ஒலியும் விலைப கர்ந்துமீன் குவைகொடுப் பவர்விளி ஒலியும் தலைசி றந்தவெள் வளைசொரி பவர்தழங் கொலியும் அலைநெ டுங்கடல் அதிரொலிக் கெதிரொலி யனைய.
| [8] |
அனைய தாகிய அந்நுளைப் பாடியில் அமர்ந்து மனைவ ளம்பொலி நுளையர்தங் குலத்தினில் வந்தார் புனையி ளம்பிறை முடியவர் அடித்தொண்டு புரியும் வினைவி ளங்கிய அதிபத்தர் எனநிகழ் மேலோர்.
| [9] |
ஆங்கு அன்பர்தாம் நுளையர்தந் தலைவராய் அவர்கள் ஏங்கு தெண்டிரைக் கடலிடைப் பலபட இயக்கிப் பாங்கு சூழ்வலை வளைத்துமீன் படுத்துமுன் குவிக்கும் ஓங்கு பல்குவை யுலப்பில வுடையராய் உயர்வார்.
| [10] |
முட்டில் மீன்கொலைத் தொழில்வளத் தவர்வலை முகந்து பட்ட மீன்களில் ஒருதலை மீன்படுந் தோறும் நட்ட மாடிய நம்பருக் கெனநளிர் முந்நீர் விட்டு வந்தனர் விடாதஅன் புடன்என்றும் விருப்பால்.
| [11] |
வாகு சேர்வலை நாள்ஒன்றில் மீனொன்று வரினும் ஏக நாயகர் தங்கழற் கெனவிடும் இயல்பால் ஆகு நாள்களில் அனேகநாள் அடுத்தொரு மீனே மேக நீர்படி வேலையில் படவிட்டு வந்தார்.
| [12] |
மீன்வி லைப்பெரு குணவினில் மிகுபெருஞ் செல்வம் தான்ம றுத்தலின் உணவின்றி அருங்கிளை சாம்பும் பான்மை பற்றியும் வருந்திலர் பட்டமீன் ஒன்று மான்ம றிக்கரத் தவர்கழற் கெனவிட்டு மகிழ்ந்தார்.
| [13] |
சால நாள்கள்இப் படிவரத் தாம்உண வயர்த்துக் கோல மேனியுந் தளரவுந் தந்தொழில் குறையாச் சீல மேதலை நின்றவர் தந்திறந் தெரிந்தே ஆல முண்டவர் தொண்டர்அன் பெனும்அமு துண்பார்.
| [14] |
ஆன நாள்ஒன்றில் அவ்வொரு மீனுமங் கொழித்துத் தூநி றப்பசுங் கனகநற் சுடர்நவ மணியால் மீனு றுப்புற அமைத்துல கடங்கலும் விலையாம் பான்மை அற்புதப் படியதொன் றிடுவலைப் படுத்தார்.
| [15] |
வாங்கு நீள்வலை அலைகடற் கரையில்வந் தேற ஓங்கு செஞ்சுடர் உதித்தென வுலகெலாம் வியப்பத் தாங்கு பேரொளி தழைத்திடக் காண்டலும் எடுத்துப் பாங்கு நின்றவர் மீன்ஒன்று படுத்தனம் என்றார்.
| [16] |
என்று மற்றுளோர் இயம்பவும் ஏறுசீர்த் தொண்டர் பொன் திரட்சுடர் நவமணி பொலிந்தமீ னுறுப்பால் ஒன்று மற்றிது என்னையா ளுடையவர்க் காகும் சென்று பொற்கழல் சேர்கெனத் திரையொடுந் திரித்தார்.
| [17] |
அகில லோகமும் பொருள்முதற் றாம்எனும் அளவில் புகலு மப்பெரும் பற்றினைப் புரையற எறிந்த இகலில் மெய்த்திருத் தொண்டர்முன் இறைவர்தாம் விடைமேல் முகில்வி சும்பிடை யணைந்தனர் பொழிந்தனர் முகைப்பூ.
| [18] |
பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே அஞ்ச லிக்கரம் சிரமிசை யணைத்துநின் றவரை நஞ்சு வாண்மணி மிடற்றவர் சிவலோகம் நண்ணித் தஞ்சி றப்புடை அடியர்பாங் குறத்தலை யளித்தார்.
| [19] |
தம்ம றம்புரி மரபினில் தகும்பெருந் தொண்டு மெய்ம்மை யேபுரி அதிபத்தர் விளங்குதாள் வணங்கி மும்மை யாகிய புவனங்கள் முறைமையிற் போற்றும் செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம்.
| [20] |
Back to Top
சேக்கிழார் பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
12.440  
கலிக்கம்ப நாயனார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
உரிமை யொழுக்கந் தலைநின்ற வுயர்தொல் மரபின் நீடுமனைத் தரும நெறியால் வாழ்குடிகள் தழைத்து வளருந் தன்மையதாய் வரும்மஞ் சுறையும் மலர்ச்சோலை மருங்கு சூழ்ந்த வளம்புறவில் பெருமை யுலகு பெறவிளங்கும் மேல்பால் பெண்ணா கடமூதூர்.
| [1] |
மற்றப் பதியின் இடைவாழும் வணிகர் குலத்து வந்துதித்தார் கற்றைச் சடையார் கழற்காத லுடனே வளர்ந்த கருத்துடையார் அற்றைக் கன்று தூங்கானை மாடத்து அமர்ந்தார் அடித்தொண்டு பற்றிப் பணிசெய் கலிக்கம்பர் என்பார் மற்றோர் பற்றில்லார்.
| [2] |
ஆன அன்பர் தாம்என்றும் அரனார் அன்பர்க் கமுதுசெய மேன்மை விளங்கு போனகமும் விரும்பு கறிநெய் தயிர்தீம்பால் தேனின் இனிய கனிகட்டி திருந்த அமுது செய்வித்தே ஏனை நிதியம் வேண்டுவன எல்லாம் இன்ப முறவளிப்பார்.
| [3] |
அன்ன வகையால் திருத்தொண்டு புரியும் நாளில் அங்கொருநாள் மன்னு மனையில் அமுதுசெய வந்த தொண்டர் தமையெல்லாம் தொன்மை முறையே அமுதுசெயத் தொடங்கு விப்பார் அவர்தம்மை முன்னர் அழைத்துத் திருவடிகள் எல்லாம் விளக்க முயல்கின்றார்.
| [4] |
திருந்து மனையார் மனையெல்லாம் திகழ விளக்கிப் போனகமும் பொருந்து சுவையில் கறியமுதும் புனிதத் தண்ணீ ருடன்மற்றும் அருந்தும் இயல்பில் உள்ளனவும் அமைத்துக் கரக நீரளிக்க விரும்பு கணவர் பெருந்தவர்தாள் எல்லாம் விளக்கும் பொழுதின்கண்.
| [5] |
முன்பு தமக்குத் தொழில்செய்யும் தமராய் ஏவல் முனிந்துபோய் என்பும் அரவும் அணிந்தபிரான் அடியா ராகி அங்கெய்தும் அன்ப ருடனே திருவேடந் தாங்கி யணைந்தா ரொருவர்தாம் பின்பு வந்து தோன்றஅவர் பாதம் விளக்கும் பெருந்தகையார்.
| [6] |
கையால் அவர்தம் அடிபிடிக்கக் காதல் மனையார் முன்பேவல் செய்யா தகன்ற தமர்போலும் என்று தேரும் பொழுதுமலர் மொய்யார் வாசக் கரகநீர் வார்க்க முட்ட முதல்தொண்டர் மையார் கூந்தல் மனையாரைப் பார்த்து மனத்துட் கருதுவார்.
| [7] |
வெறித்த கொன்றை முடியார்தம் அடியார் இவர்முன் மேவுநிலை குறித்து வெள்கி நீர்வாரா தொழிந்தாள் என்று மனங்கொண்டு மறித்து நோக்கார் வடிவாளை வாங்கிக் கரகம் வாங்கிக்கை தறித்துக் கரக நீரெடுத்துத் தாமே அவர்தாள் விளக்கினார்.
| [8] |
விளக்கி அமுது செய்வதற்கு வேண்டு வனதா மேசெய்து துளக்கில் சிந்தை யுடன்தொண்டர் தம்மை அமுது செய்வித்தார் அளப்பில் பெருமை யவர்பின்னு மடுத்த தொண்டின் வழிநின்று களத்தி னஞ்ச மணிந்தவர்தா ணிழற்கீ ழடியா ருடன்கலந்தார்.
| [9] |
ஓத மலிநீர் விடமுண்டார் அடியார் வேடம் என்றுணரா மாத ரார்கை தடிந்தகலிக் கம்பர் மலர்ச்சே வடிவணங்கிப் பூத நாதர் திருத்தொண்டு புரிந்து புவனங் களிற்பொலிந்த காதல் அன்பர் கலிநீதி யார்தம் பெருமை கட்டுரைப்பாம்.
| [10] |
Back to Top
சேக்கிழார் பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
12.450  
கலிய நாயனார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பேருலகில் ஓங்குபுகழ்ப் பெருந்தொண்டை நன்னாட்டு நீருலவுஞ் சடைக்கற்றை நிருத்தர்திருப் பதியாகும் காருலவு மலர்ச்சோலைக் கன்னிமதில் புடைசூழ்ந்து தேருலவு நெடுவீதி சிறந்ததிரு வொற்றியூர்.
| [1] |
பீடுகெழு பெருந்தெருவும் புத்தருடன் பீலிஅமண் வேடமுடை யவர்பொருள்போல் ஆகாச வெளிமறைக்கும் ஆடிகொடி மணிநெடுமா ளிகைநிரைகள் அலைகமுகின் காடனைய கடல்படப்பை யெனவிளங்குங் கவின்காட்டும்.
| [2] |
பன்னுதிருப் பதிகஇசைப் பாட்டுஓவா மண்டபங்கள் அன்னநடை மடவார்கள் ஆட்டு ஓவா அணியரங்கு பன்முறைதூ ரியமுழங்கும் விழவுஓவா பயில்வீதி செந்நெல்லடி சிற்பிறங்கல் உணவுஓவா திருமடங்கள்.
| [3] |
கெழுமலர்மா தவிபுன்னை கிளைஞாழல் தளையவிழும் கொழுமுகைய சண்பகங்கள் குளிர்செருந்தி வளர்கைதை முழுமணமே முந்நீரும் கமழமலர் முருகுயிர்க்கும் செழுநிலவின் துகளனைய மணற்பரப்புந் திருப்பரப்பு.
| [4] |
எயிலணையும் முகில்முழக்கும் எறிதிரைவே லையின்முழக்கும் பயில்தருபல் லியமுழக்கும் முறைதெரியாப் பதியதனுள் வெயில்அணிபல் மணிமுதலாம் விழுப்பொருளா வனவிளக்கும் தயிலவினைத் தொழின்மரபில் சக்கரப்பா டித்தெருவு.
| [5] |
அக்குலத்தின் செய்தவத்தால் அவனிமிசை அவதரித்தார் மிக்கபெருஞ் செல்வத்து மீக்கூர விளங்கினார் தக்கபுகழ்க் கலியனார் எனும்நாமந் தலைநின்றார் முக்கண்இறை வர்க்குஉரிமைத் திருத்தொண்டின் நெறிமுயல்வார்.
| [6] |
எல்லையில்பல் கோடிதனத் திறைவராய் இப்படித்தாம் செல்வநெறிப் பயனறிந்து திருவொற்றி யூரமர்ந்த கொல்லைமழ விடையார்தம் கோயிலின்உள் ளும்புறம்பும் அல்லும்நெடும் பகலுமிடும் திருவிளக்கின் அணிவிளைத்தார்.
| [7] |
எண்ணில்திரு விளக்குநெடு நாளெல்லாம் எரித்துவரப் புண்ணியமெய்த் தொண்டர்செயல் புலப்படுப்பார் அருளாலே உண்ணிறையும் பெருஞ்செல்வம் உயர்த்தும்வினைச் செயல்ஓவி மண்ணிலவர் இருவினைபோல் மாண்டதுமாட் சிமைத்தாக.
| [8] |
திருமலிசெல் வத்துழனி தேய்ந்தழிந்த பின்னையுந்தம் பெருமைநிலைத் திருப்பணியில் பேராத பேராளர் வருமரபில் உள்ளோர்பால் எண்ணெய்மா றிக்கொணர்ந்து தருமியல்பில் கூலியினால் தமதுதிருப் பணிசெய்வார்.
| [9] |
வளமுடையார் பால்எண்ணெய் கொடுபோய்மா றிக்கூலி கொளமுயலும் செய்கையும்மற் றவர்கொடா மையின்மாறத் தளருமனம் உடையவர்தாம் சக்கரஎந் திரம்புரியும் களனில்வரும் பணிசெய்து பெறுங்கூலி காதலித்தார்.
| [10] |
செக்குநிறை எள்ளாட்டிப் பதமறிந்து திலதயிலம் பக்கமெழ மிகவுழந்தும் பாண்டில்வரும் எருதுய்த்தும் தக்கதொழிற் பெறுங்கூலி தாங்கொண்டு தாழாமை மிக்கதிரு விளக்கிட்டார் விழுத்தொண்டு விளக்கிட்டார்.
| [11] |
அப்பணியால் வரும்பேறும் அவ்வினைஞர் பலருளராய் எப்பரிசுங் கிடையாத வகைமுட்ட இடருழந்தே ஒப்பில்மனை விற்றெரிக்கு முறுபொருளும் மாண்டதற்பின் செப்பருஞ்சீர் மனையாரை விற்பதற்குத் தேடுவார்.
| [12] |
மனமகிழ்ந்து மனைவியார் தமைக்கொண்டு வளநகரில் தனமளிப்பார் தமையெங்கும் கிடையாமல் தளர்வெய்திச் சினவிடையார் திருக்கோயில் திருவிளக்குப் பணிமுட்டக் கனவினும்முன் பறியாதார் கையறவால் எய்தினார்.
| [13] |
பணிகொள்ளும் படம்பக்க நாயகர்தங் கோயிலினுள் அணிகொள்ளுந் திருவிளக்குப் பணிமாறும் அமையத்தில் மணிவண்ணச் சுடர்விளக்கு மாளில்யான் மாள்வனெனத் துணிவுள்ளங் கொளநினைந்தவ் வினைமுடிக்கத் தொடங்குவார்.
| [14] |
திருவிளக்குத் திரியிட்டங்கு அகல்பரப்பிச் செயல்நிரம்ப ஒருவியஎண் ணெய்க்குஈடா உடல்உதிரங் கொடுநிறைக்கக் கருவியினால் மிடறரிய அக்கையைக் கண்ணுதலார் பெருகுதிருக் கருணையுடன் நேர்வந்து பிடித்தருளி.
| [15] |
மற்றவர்தம் முன்னாக மழவிடைமேல் எழுந்தருள உற்றவூ றதுநீங்கி ஒளிவிளங்க வுச்சியின்மேல் பற்றியஞ் சலியினராய் நின்றவரைப் பரமர்தாம் பொற்புடைய சிவபுரியில் பொலிந்திருக்க அருள்புரிந்தார்.
| [16] |
தேவர்பிரான் திருவிளக்குச் செயல்முட்ட மிடறரிந்து மேவரிய வினைமுடித்தார் கழல்வணங்கி வியனுலகில் யாவரெனாது அரனடியார் தமையிகழ்ந்து பேசினரை நாவரியுஞ் சத்தியார் திருத்தொண்டின் நலமுரைப்பாம்.
| [17] |
Back to Top
சேக்கிழார் பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
12.460  
சத்தி நாயனார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
களமர் கட்ட கமலம் பொழிந்ததேன் குளநி றைப்பது கோலொன்றில் எண்திசை அளவும் ஆணைச் சயத்தம்பம் நாட்டிய வளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர்.
| [1] |
வரிஞ்சை யூரினில் வாய்மைவே ளாண்குலம் பெருஞ்சி றப்புப் பெறப்பிறப்பு எய்தினார் விரிஞ்சன் மால்முதல் விண்ணவர் எண்ணவும் அருஞ்சி லம்பணி சேவடிக் காட்செய்வார்.
| [2] |
அத்த ராகிய வங்கணர் அன்பரை இத்த லத்தில் இகழ்ந்தியம் பும்முரை வைத்த நாவை வலித்தரி சத்தியால் சத்தி யார்எனும் நாமந் தரித்துளார்.
| [3] |
தீங்கு சொற்ற திருவிலர் நாவினை வாங்க வாங்குதண் டாயத்தி னால்வலித் தாங்க யிற்கத்தி யால்அரிந் தன்புடன் ஓங்கு சீர்த்திருத் தொண்டின் உயர்ந்தனர்.
| [4] |
அன்ன தாகிய ஆண்மைத் திருப்பணி மன்னு பேரு லகத்தில் வலியுடன் பன்னெ டும்பெரு நாள்பரி வால்செய்து சென்னி யாற்றினர் செந்நெறி யாற்றினர்.
| [5] |
ஐய மின்றி யரிய திருப்பணி மெய்யி னாற்செய்த வீரத் திருத்தொண்டர் வைய்யம் உய்ய மணிமன்று ளாடுவார் செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர்.
| [6] |
நாய னார்தொண் டரைநலங் கூறலார் சாய நாவரி சத்தியார் தாள்பணிந்து ஆய மாதவத் தையடி கள்ளெனும் தூய காடவர் தந்திறஞ் சொல்லுவாம்.
| [7] |
Back to Top
சேக்கிழார் பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
12.470  
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
வையம்நிகழ் பல்லவர்தம் குலமரபின் வழித்தோன்றி வெய்யகலி யும்பகையும் மிகையொழியும் வகையடக்கிச் செய்யசடை யார்சைவத் திருநெறியால் அரசளிப்பார் ஐயடிகள் நீதியால் அடிப்படுத்துஞ் செங்கோலார்.
| [1] |
திருமலியும் புகழ்விளங்கச் சேணிலத்தில் எவ்வுயிரும் பெருமையுடன் இனிதுஅமரப் பிறபுலங்கள் அடிப்படுத்துத் தருமநெறி தழைத்தோங்கத் தாரணிமேற் சைவமுடன் அருமறையின் துறைவிளங்க அரசளிக்கும் அந்நாளில்.
| [2] |
மன்னவரும் பணிசெய்ய வடநூல்தென் தமிழ்முதலாம் பன்னுகலை பணிசெய்யப் பார்அளிப்பார் அரசாட்சி இன்னல்என இகழ்ந்ததனை எழிற்குமரன் மேல்இழிச்சி நன்மைநெறித் திருத்தொண்டு நயந்தளிப்பார் ஆயினார்.
| [3] |
தொண்டுரிமை புரக்கின்றார் சூழ்வேலை யுலகின்கண் அண்டர்பிரான் அமர்ந்தருளும் ஆலயங்க ளானவெலாம் கண்டிறைஞ்சித் திருத்தொண்டின் கடனேற்ற பணிசெய்தே வண்தமிழின் மொழிவெண்பா ஓர்ஒன்றா வழுத்துவார்.
| [4] |
பெருத்தெழுகா தலில்வணங்கிப் பெரும்பற்றத் தண்புலியூர்த் திருச்சிற்றம் பலத்தாடல் புரிந்தருளுஞ் செய்யசடை நிருத்தனார் திருக்கூத்து நேர்ந்திறைஞ்சி நெடுந்தகையார் விருப்பினுடன் செந்தமிழின் வெண்பாமென் மலர்புனைந்தார்.
| [5] |
அவ்வகையால் அருள்பெற்றங்கு அமர்ந்துசில நாள்வைகி இவ்வுலகில் தம்பெருமான் கோயில்களெல் லாம்எய்திச் செவ்வியஅன் பொடுபணிந்து திருப்பணிஏற் றனசெய்தே எவ்வுலகும் புகழ்ந்தேத்தும் இன்தமிழ்வெண் பாமொழிந்தார்.
| [6] |
இந்நெறியால் அரனடியார் இன்பமுற இசைந்தபணி பன்னெடுநாள் ஆற்றியபின் பரமர்திரு வடிநிழற்கீழ் மன்னுசிவ லோகத்து வழியன்பர் மருங்கணைந்தார் கன்னிமதில் சூழ்காஞ்சிக் காடவர் ஐடிகளார்.
| [7] |
பையரவ மணியாரம் அணிந்தார்க்குப் பாவணிந்த ஐயடிகள் காடவனார் அடியிணைத்தா மரைவணங்கிக் கையணிமான் மழுவுடையார் கழல்பணிசிந் தனையுடைய செய்தவத்துக் கணம்புல்லர் திருத்தொண்டு விரித்துரைப்பாம்.
| [8] |
உளத்திலொரு துளக்கம் இலோம் உலகுய்ய இருண்ட திருக் களத்து முது குன்றர்தரு கனகம் ஆற்றினிலிட்டு வளத்தின் மலிந்தேழ் உலகும் வணங்குபெருந் திருவாரூர்க் குளத்தில்எடுத் தார்வினையின் குழிவாய்நின்று எனையெடுத்தார்.
| [9] |